சுந்தரம்… (முழுப்பகுதி)
“என்னமா சொல்லற, கவிய காணோமா” என்றவன் சிந்தனையில் இருந்து விடுபடுவதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
புதுமணத்தம்பதிகளாய் ரவியும் கவியும்…கவியின் கழுத்தில் புதிதாய் கட்டிய தாலி பளபளத்துக் கொண்டிருந்தது. சிந்தனை புயலில் சிக்கி சின்னாபின்னம் ஆனவன் தன் நிலை வர சில நொடிகள் பிடித்தது.
வேகவேகமாய் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தவன் “வாழ்த்துக்கள் ரவி” என்று புன்னகை ஒட்டிய முகத்தோடு கவிதாவை பார்த்தான்.
“போன நாச்சியம்மன் திருவிழாவில் இருந்து கவியும் நானும் காதலிக்கிறோம், சுந்தரம்…என் அப்பா மேல இருந்த பயத்தால உங்கிட்ட கூட சொல்லல எங்களுக்கு வேற வழி தெரியல…கொஞ்சம் கூட யோசிக்க நேரம் கொடுக்காம எல்லா காரியமும் நடந்துடுச்சு” என்றவன் ஆதரவாக சுந்தரத்தின் கைகளை பிடித்தான். “உனக்கே தெரியும் எங்க குடும்பத்தை பத்தி என் அப்பாவ சமாளிக்காம நான் கல்யாணம் பண்ண முடியாத நிலைமை, வேறு வழி தெரியலடா..உன்ன தான் மலையா நம்பி வந்திருக்கேன்” என்று புதிர் முடிச்சு போட்டான் வார்த்தைகளில்.
அவர் போற்றும் சாதியை விட்டு பார்த்தால் ரவியின் அப்பா மிகவும் நல்லவர். அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு பெற்றவர் ஆனால் அதையும் தாண்டி சாதி சங்கத்தில் கிடைக்கும் பதவிக்கு புளகாங்கிதம் அடைபவர் தாழ்ந்த சாதி பெண்ணை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமட்டார். இதுவெல்லாம் சுந்தரத்திற்கு நன்றாக தெரியும் ஆனால் ரவி எதிர்பாக்கும் உதவி என்னவென்பதே இப்போதைய நெருடல்…அவன் உணர்ச்சி கடலில் ஒரு புயல் ஓயும் முன்னே அடுத்த புயல் வீச ஆரம்பித்தது.
“என்னனு சொல்லு ரவி, முடிந்ததை கண்டிப்பா செய்றேன்” அவன் ஆதரவை வார்தையினில் கட்டினான். கவியின் பார்வையிலோ, உடல் மொழியிலேயோ சுந்தரத்தினால் எதையும் அறியமுடியவில்லை அமைதியான கடல் போல் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“கொஞ்ச நாள் கவிய உன் கூட வச்சிக்க முடியுமா, அதுக்குள்ள நான் ஊருக்கு போய் எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு வந்து கூட்டிட்டு போறேன். என் அப்பா அவல பார்த்தா கண்டிப்பா கொலயே பண்ணிடுவார், தயவு செஞ்சு மாட்டேனு சொல்லிடாதே” என்றவன் கரங்கள் சுந்தரத்தின் கையை அழுத்தியது.
ஒரு வாரம் கழிந்தது…
கைபேசியின் மணி அடித்தது..மறு முனையில் சுந்தரத்தின் அம்மா “சுந்தரம், நல்ல இருக்கியாப்பா” குரலில் அதிக சோர்வு தெரிந்தது.
“நல்ல இருக்கேன்மா,என்ன ஆச்சுமா, ரவி கிட்ட இருந்து எந்த பதிலும் வரல” கேள்வியில் கவிதாவின் சோகம் கலந்திருந்தது அவளும் ஆர்வத்துடன் இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“சுந்தரம்…சொல்றேனு தப்பா எடுதுக்காத , அந்த பொண்ணை இனியும் நீ வச்சு இருக்குறது சரியா வராதுப்பா, ரவிக்கு அவங்க அப்பா வலுக்கட்டாயமா அவங்க மாமன் பொண்ண கட்டிவச்சிட்டாரு, ஊருக்கே விஷயம் இப்ப தான் தெரியும் யார்க்கும் என்ன நடக்குதுன்னு தெரியலப்பா, இதுக்கு நடுவுல போலீஸ் வந்து உன் விலாசம் வாங்கிட்டு போனங்கப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு ” என்றவளின் உடல் நடுக்கம் குரலில் தெரிந்தது.
எல்லா நம்பிக்கையும் இழந்த மரணதண்டனை கைதியாய் சுந்தரத்தின் மனம் அந்த நிமிடம் இருந்தது.
இவள் என் வாழ்கை பாதையில் பல ஆண்டுகள் கூட வந்தவள், இந்த நிமிடம் வரை வாழ்க்கையின் துன்பங்களை மட்டும் சுமந்து கொண்டு எந்த சலனமும் இன்றி நிர்கதியாய் என் முன்னே நின்று கொண்டிருக்கிறாள், இவள் வாழ்கை எந்த வகையிலும் வீணாகப் போகக் கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு பயணித்தான். பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவள் கேள்விக் குறியாய் அமர்திருந்தால், சிந்தனையின் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு அவள் சொல்லிய காரணங்களும் அவள் சிந்திய கண்ணீர் துளிகளும் அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது. காதல் சுமையை சுமந்து கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கிளம்பியவன், காதல் தோழமையில் கரைந்து போக தன் நீண்ட கால தோழிக்காக அவளின் நல்வாழ்கை ஒன்றே குறியாய் தன் மண்ணில் கால் வைத்தான். அவள் கூனிக் குறுகி உயிரோடு உடலையும் அவன் பின்னே மறைக்க யத்தனித்தாள், அவன், அவள் கரம் பற்றி முகம் நிமிர்த்தி பள்ளி சிறுவன் போல் அவளை பிடித்து கொண்டு ரவியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.